ஆய்தம்
தமிழ் எழுத்துக்களில் உயிர், மெய் என்ற இரண்டிலும் அடங்காதது ஆய்தம் (குற்றியலுகரமும், குற்றியலிகரமும் உயிர் ஒலிகளே). வடிவத்தாலும் ஏனைய எழுத்துகளைப் போல் கோட்டு வடிவம் இன்றிப் புள்ளி வடிவம் பெற்றிருப்பது ஆய்தம். அதனால்தான் இதனைத் ‘தனிநிலை’ என்றழைப்பர் பின்னால் வந்த இலக்கண நூலார் (நன்னூல்). ஆய்த எழுத்துக் குறித்துப் பல்வேறுபட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. ஆய்த எழுத்தைத் தொல்காப்பியர் ஒரு சார்பெழுத்தாகக் கருதுகிறார் என்பதைச் சென்ற பாடத்தில் பார்த்தோம். ஆய்தம் மொழியில் பயிலும் முறையை விளக்கும் தொல்காப்பியர் அது தனிமொழியிலும் புணர்மொழியிலும் வருவதை விளக்குகிறார்.
தனிமொழி ஆய்தம்
ஒரு குற்றெழுத்தின் முன்னர், உயிரோடு சேர்ந்த வல்லெழுத்து ஆறன் மேலும் ஆய்தம் வரும். அதாவது குறில் எழுத்தை அடுத்தும் வல்லின உயிர்மெய்க்கு முன்பும் ஆய்தம் வரும். இந்த வல்லின உயிர்மெய் பெரும்பாலும் குற்றியலுகரமாகவே அமையும்; சிறுபான்மை வேறு வல்லின உயிர்மெய்யாகவும் வரும்.
(எ-டு)
எஃகு, அஃது,
கஃசு
பஃறி எ, அ, க, ப
கு, து, சு
றி - குறில்கள்
- குற்றியலுகரங்கள்
- வேறு உயிர்மெய்
நூற்பா
குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே.
(தொல். எழுத்து. மொழி. 5)
‘ஆய்தப் புள்ளி’ என்பதனால் அதனை மெய்போலக் கொள்ள வேண்டும் என்கிறார் இளம்பூரணர்.
புணர்மொழி ஆய்தம்
இரு சொற்களின் புணர்ச்சியில் ஆய்தம் வருவதுண்டு.
(எ-டு)
அல் + திணை
பல் + தொடை
கல் + தீது
முள் + தீது
>
>
>
>
அஃறிணை
பஃறொடை
கஃறீது
முஃடீது
இங்கு நிலைமொழியீற்றில் உள்ள லகரமும் ளகரமும் வருமொழி முதலில் உள்ள தகரத்தோடு புணரும் போது ஆய்தமாகத் திரிந்துள்ளன. இவ்வாறு வருவதே புணர்மொழி ஆய்தம்.
நூற்பா
ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும்.
(தொல். எழுத்து, மொழி. 6)
ஈறியல் மருங்கு = நிலைமொழியீறும் வருமொழி முதலும் புணர்தல்.
இசைமை = ஆய்த எழுத்தின் ஓசை.
இவ்வாறு புணர்ச்சியில் ஆய்தம் தோன்றுவது பற்றிப் பின்னர்ப் புள்ளி மயங்கியலில் விளக்கப் பெறும். (அலகு 5.1)
தனிமொழி ஆய்தம் தொடர்பான மற்றொரு கருத்து
ஆய்த எழுத்தைப் பற்றித் தொல்காப்பியர் மற்றொரு கருத்தையும் கூறுகிறார். நிறத்தையும், ஓசையையும் குறிக்கும் குறிப்பு மொழிகளில் ஆய்தம் இடம் பெறும். இது அருகிய வழக்கே என்கிறார்.
(எ-டு)
கஃறு (நிறம்), சுஃறு (இசை)
நச்சினார்க்கினியர் ஆய்தம் அளபெடுத்து வருவதை இங்குக் குறிப்பிடுகிறார்.
(எ-டு)
கஃறென்னும் கல்லதர் அத்தம்
சுஃறென்னும் தண்தோட்டுப் பெண்ணை
நூற்பா
உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலை யான.
(தொல். எழுத்து. மொழி. 7)
ஆய்தம் தொடர்பான மொழியியல் கருத்துகள்
ஆய்தத்தை உரசொலி என்பர் மொழியியலார். புணர்மொழியில் வரும் ஆய்தங்கள் வெடிப்பொலிகளின் (வல்லினமெய்) மாற்று வடிவங்கள் என்கிறார் தெ.பொ.மீ. (தமிழ்மொழி வரலாறு, ப. 94,95) கல் + தீது = கற்றீது; முள் + தீது = முட்டீது என வரும் புணர்ச்சிகளில் ற், ட் எனும் வல்லினங்களுக்கு மாற்று வடிவமாக வருவது ஆய்தம். அதாவது ‘கற்றீது’ என்பது ‘கஃறீது’ எனவும் ‘முட்டீது’ என்பது முஃடீது எனவும் வரும்போது ற், ட் ஒலிகளுக்கு ஃ மாற்று வடிவமாக வருவது காணலாம். இதுபற்றிப் பின்னர் அலகு 5.1 இல் பாடத்தில் விரிவாகக் காணலாம். இந்த ஆய்த ஒலி வல்லெழுத்து ஆறன் மேல்நின்று அவற்றின் வல்லோசையை மென்மையாக்கி விடுகிறது. ‘அக்கு’ என்பதில் உள்ள ‘கு’வையும் அஃகு என்பதில் உள்ள ‘கு’ வையும் உச்சரித்து ஒப்பிடுங்கள். இதனை உணர்ந்த மாணிக்கநாயகர் பிறமொழிக்கண் காணப்படும் சில ஒலிகளை மென்மைப்படுத்த ஆய்தத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறிக் ‘காப்பி’யை காஃபி என்று எழுத வழிகாட்டினார்.
ஆய்தம் தொடர்பான இலக்கணக் கருத்துகளைத் தொகுத்துப் பாருங்கள்.
ஆய்தம் உயிரும் மெய்யும் அல்லாத தனிநிலை எழுத்து.
எனினும் மெய்க்குரிய அரை மாத்திரை பெறுவதால் ஒருவகையில் மெய்போலக் கொள்ளப்படும்.
ஆய்தம் தனிமொழியிலும் வரும்; புணர்மொழியிலும் வரும்.
குற்றெழுத்தின் பின்னாலும் வல்லின உயிர்மெய்க்கு முன்னரும் வரும். இதுவே ஆய்தத்துக்கு இடம்.
ஆய்தம் அளபெடுத்தும் வருவதுண்டு.
மொழியியலார் ஆய்தத்தை வெடிப்பொலிகளின் மாற்று வடிவங்களாகக் கொள்கின்றனர்.
ஆய்த எழுத்தைப் பிறமொழிச் சொற்களில் உள்ள வல்லெழுத்துகளை மென்மையாக்கப் பயன்படுத்தும் முயற்சி தமிழில் சிலரால் புகுத்தப்பட்டது
No comments:
Post a Comment