கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை!
விளக்கம்: கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை.
கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே! அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர்.
ஒருநாள் இருவரையும் அழைத்து, “எனக்கிருப்பது ஒரு வீடும், இரு ஏக்கர் நலமுமே! நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா?” என்று கேட்டார்.
கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், “அப்பா! நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன்!” என்றான். இளையவன் முத்து, “எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன்!” என்றான்.
இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான்.
ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், “தம்பி! கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது. ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல! பணம் எனும் செல்வம் நிலையற்றது.
உனக்குக் கிடைத்த தொகையில் என்னைப்போல் நீயும் உயர் கல்வி பயின்றிருக்கலாம்! ஆனால், நீ அதை வியாபாரத்தில் முதலீடாக வைத்து விட்டாய்! நீ செய்தது தவறு என்று கூறவில்லை. ஒருவேளை உன்னுடைய வியாபாரம் வெற்றிகரமாகவும் இயங்கலாம் என்று எண்ணியே நான் உன்னைத் தடுக்கவில்லை. ஆனால் வியாபாரத்தில் லாபம் ஈட்டவும் செய்யலாம்; நட்டமும் ஆகலாம்! கல்வி அவ்வாறு அல்ல! நடந்ததை நினைத்து வருந்தாதே! இப்போதும் நீ இளைஞன்தான்! கல்வி கற்க வயது ஒரு தடையில்லை. என்னைப்போல் நீயும் உயர்கல்வி பயில நான் உனக்கு உதவி செய்கிறேன். அதன்பிறகு, என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதை நீ முடிவு செய்வாய்!” என்றான்.
தன் சகோதரன் சொல்வதில் உள்ள நிதர்சனத்தை புரிந்து கொண்ட முத்து, உயர்படிப்புக்கு ஆயத்தமானான்.
No comments:
Post a Comment